Link to home pageLanguagesLink to all Bible versions on this site
8
1 நீர் என் தாயின் மார்பில் பால் குடித்த
என் சகோதரனாய் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே!
உம்மை வெளியில் கண்டால்
நான் உம்மை முத்தம் செய்திருப்பேன்;
யாரும் என்னை இகழமாட்டார்கள்.
2 நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன்,
எனக்குக்[a] கற்றுக்கொடுத்தவளிடம் கொண்டு வந்திருப்பேன்.
குடிப்பதற்கு வாசனையுள்ள திராட்சை இரசத்தையும்
என் மாதுளம் பழச்சாற்றையும்
நான் உமக்குக் குடிக்கத் தருவேன்.
3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது,
அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
4 எருசலேமின் மங்கையரே, ஆணையிடுகிறேன்;
காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,
அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
தோழியர்
5 தன் காதலர்மேல் சாய்ந்துகொண்டு
பாலைவனத்திலிருந்து வருகிற இவள் யார்?
காதலி
ஆப்பிள் மரத்தின் கீழே நான் உம்மை எழுப்பினேன்;
அங்குதான் உமது தாய் உம்மைப் பெற்றெடுத்தாள்,
பிரசவ வேதனைப்பட்ட அவள், அங்குதான் உம்மைப் பெற்றெடுத்தாள்.
6 என்னை உமது உள்ளத்திலும் கையிலும்
முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்;
ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது,
அதின் வைராக்கியம்
பாதாளத்தைப்போல கொடியது,
அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு,
அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது.
7 பெருவெள்ளமும் காதலை அணைக்காது;
ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது.
காதலுக்குக் கைமாறாக,
ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும்,
அது[b] முற்றிலும் அவமதிக்கப்படும்.
தோழியர்
8 எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்,
அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை.
அவளைப் பெண்பார்க்க வரும்நாளில்
நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்?
9 அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால்,
அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம்.
ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால்,
கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம்.
காதலி
10 நான் ஒரு மதில்போல கன்னிகைதான்,
என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன.
[c]அவர் என்னைப் பார்க்கும்போது
அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன்.
11 பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது;
அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார்.
ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு
ஆயிரம் சேக்கல்[d] வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது.
12 ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது;
சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும்,
அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும்.
காதலன்
13 தோழிகள் சூழ,
தோட்டத்தில் வசிப்பவளே,
உன் குரலை நான் கேட்கட்டும்.
காதலி
14 என் அன்பரே, இங்கே வாரும்,
நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல்,
வெளிமானைப் போலவும்
மரைக்குட்டியைப் போலவும் வாரும்.

<- உன்னதப்பாட்டு 7