Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 79
ஆசாபின் சங்கீதம்.
1 இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்;
அவர்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்திவிட்டார்கள்,
அவர்கள் எருசலேமை இடித்துக் கற்குவியலாக்கிவிட்டார்கள்.
2 அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை
ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாக்கி,
உமது பரிசுத்தவான்களின் சதையை காட்டு மிருகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள்.
3 அவர்கள் எருசலேம் முழுவதையும் சுற்றிலும்,
இரத்தத்தைத் தண்ணீரைப்போல் ஊற்றிவிட்டார்கள்;
அங்கு இறந்தோரைப் புதைக்க ஒருவரும் இல்லை.
4 நாங்கள் எங்கள் அயலாரின் நிந்தனைக்கும்,
எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாய் இருக்கிறோம்.
 
5 யெகோவாவே, எதுவரைக்கும் எங்கள்மேல் கோபமாய் இருப்பீர்?
எப்பொழுதுமே கோபமாய் இருப்பீரோ?
உமது சினம் எவ்வளவு காலத்திற்கு நெருப்பைப்போல் எரியும்?
6 உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும்,
உமது பெயரைச் சொல்லி வழிபடாத
அரசுகள் மேலும்
உமது கடுங்கோபத்தை ஊற்றும்.
7 ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கி,
அவனுடைய சொந்த நாட்டை அழித்துப்போட்டார்கள்.
 
8 எங்கள் முன்னோரின் பாவங்களை எங்களுக்கு விரோதமாய் நினைவில் கொள்ளாதேயும்;
உமது இரக்கம் எங்களை விரைவாய் சந்திப்பதாக;
ஏனெனில் நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு இருக்கிறோம்.
9 எங்கள் இரட்சகராகிய இறைவனே,
உமது பெயரின் மகிமையின் நிமித்தம் எங்களுக்கு உதவிசெய்யும்;
உமது பெயரின் நிமித்தம்
எங்களை மீட்டு, எங்கள் பாவங்களை மன்னியும்.
10 “அவர்களுடைய இறைவன் எங்கே?”
என்று பிற நாட்டு மக்கள் ஏன் சொல்லவேண்டும்?
 
சிந்தப்பட்ட உமது ஊழியரின் இரத்தத்திற்காக நீர் பழிவாங்குகிறீர் என்பதை,
எங்கள் கண்களுக்கு முன்பாக பிற நாட்டு மக்கள் மத்தியில் தெரியும்படிச் செய்யும்.
11 சிறைக் கைதிகளின் பெருமூச்சைக் கேளும்;
மரணத் தீர்ப்புக்கு உள்ளானவர்களை உமது புயத்தின் பலத்தால் பாதுகாத்துக்கொள்ளும்.
12 யெகோவாவே, எங்கள் அயலார் உம்மேல் வாரியெறிந்த நிந்தனையை
அவர்களுடைய மடியில் ஏழுமடங்காகத் திரும்பக்கொடும்.
13 அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள்
என்றென்றும் உம்மைத் துதிப்போம்;
தலைமுறை தலைமுறையாக
நாங்கள் உமது துதியைச் சொல்வோம்.

<- சங்கீதம் 78சங்கீதம் 80 ->