Link to home pageLanguagesLink to all Bible versions on this site
11
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார்.

2 யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி, 3 “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.

4 அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: 5 பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.

7 யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? 8 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள். 9 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

10 “ ‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்;
அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’[a]
என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.

11 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான். 12 யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். 13 ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது. 14 வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். 15 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.

16 “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:

17 “ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’
என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.

18 “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். 19 மானிடமகனோ[b] விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.

மனந்திரும்பாத பட்டணங்கள்
20 சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். 21 “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். 22 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும். 23 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை[c] கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். 24 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
களைப்புற்றோருக்கு ஆறுதல்
25 அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. 26 ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.

27 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்.

28 “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன். 30 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”

<- மத்தேயு 10மத்தேயு 12 ->