12 இதை விளங்கிக்கொள்ளத்தக்க ஞானமுள்ளவன் யார்? யாருக்கு யெகோவாவினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? யாரால் அதை விளக்கிச் சொல்லமுடியும்? ஏன் இந்த நாடு ஒருவரும் கடந்துசெல்ல முடியாதபடி, அழிக்கப்பட்டு பாலைவனத்தைப்போல் பாழாகிக் கிடக்கிறது.
13 ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. 14 அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார். 15 ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன். 16 அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.”
17 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“இப்பொழுதும் யோசித்துப் பாருங்கள், ஒப்பாரி வைக்கும் பெண்களை அழைத்திடுங்கள்;
அவர்களில் திறமையானவர்களுக்கு ஆளனுப்புங்கள்.
18 அவர்கள் விரைவாக வந்து,
எங்களுக்காக ஒப்பாரி வைக்கட்டும்.
எங்கள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து,
எங்கள் இமைகளிலிருந்து தண்ணீர் தாரைகள்
ஓடும்வரைக்கும் எங்களுக்காகப் புலம்பட்டும்.”
19 சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது:
“நாங்கள் எவ்வளவாய் அழிந்து போனோம்.
எங்கள் வெட்கம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
எங்கள் வீடுகள் பாழாய்க் கிடப்பதால்,
எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் புறப்படவேண்டும்” என்கிறார்கள்.
20 பெண்களே, இப்பொழுது யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
அவருடைய வாயின் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைத் திறவுங்கள்.
எப்படி ஒப்பாரி வைப்பதென உங்கள் மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
ஒருவருக்கொருவர் ஒரு புலம்பலைக் கற்றுக்கொடுங்கள்.
21 மரணம் ஜன்னல் வழியே ஏறி
எங்கள் அரண்களுக்குள் புகுந்து விட்டது.
வீதிகளிலிருக்கும் பிள்ளைகளையும்,
பொதுச் சதுக்கங்களில் நிற்கும் வாலிபரையும் வெட்டி வீழ்த்திவிட்டது.
22 யெகோவா அறிவிக்கிறது இதுவே என்று சொல்:
மனிதரின் சடலங்கள்
திறந்த வெளியிலுள்ள குப்பையைப்போல் கிடக்கும்.
அவைகள் அறுவடை செய்கிறவனுக்குப் பின்னால்,
பொறுக்குவதற்கு ஒருவனுமில்லாமல் விழுந்து கிடக்கும்
தானியக் கதிரைப்போல் கிடக்கும் என்றார்.
23 யெகோவா கூறுவது இதுவே:
“அறிவாளி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
பலசாலி தன் பலத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
செல்வந்தன் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
24 ஆனால் பெருமை பாராட்டுபவன் இதைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்:
அது, ஒருவன் என்னை அறிந்து, விளங்கிக்கொண்டதாலும்,
நானே பூமியில் தயவும் நியாயமும் நீதியும் செய்கிற யெகோவா என்பதை
அறிந்திருக்கிறதைக் குறித்துமே அவன் பெருமை பாராட்டட்டும்.
அவைகளிலேயே நான் மகிழ்கிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
25 “மாம்சத்தில் மாத்திரம் விருத்தசேதனம் செய்யப்பட்ட எல்லோரையும் தண்டிக்கும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். 26 எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களையும், தூர இடத்திலுள்ள பாலைவனங்களில் குடியிருக்கும்[b] யாவரையும் நான் தண்டிக்கும் நாட்கள் வரும். ஏனெனில் இந்த தேசத்தார் யாவரும் உண்மையாக விருத்தசேதனம் பெறாதவர்கள். அதுபோல் முழு இஸ்ரயேல் குடும்பமும் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்.