4 எனவே சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதி பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தன் எல்லாப் படைகளுடனும், எருசலேமுக்கு விரோதமாக அணிவகுத்து வந்தான். அவர்கள் நகரத்துக்கு வெளியே முகாமிட்டு, அதைச் சுற்றிலும் கொத்தளங்களை அமைத்தார்கள். 5 சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
6 நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில், பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால், அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது. 7 அப்பொழுது பட்டணத்து மதில் உடைக்கப்பட்டது. முழு இராணுவமும் தப்பி ஓடியது. பாபிலோனியர் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசனின் தோட்டத்தின் அருகே இரு சுவர்களுக்கும் இடையில் இருந்த வாசல் வழியாக, இரவு நேரத்தில் அவர்கள் பட்டணத்தைவிட்டு ஓடினார்கள். அவர்கள் யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கித் தப்பி ஓடினார்கள். 8 ஆனால் பாபிலோனியப் படைகள் சிதேக்கியா அரசனைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் அவனைப் பிடித்தார்கள். அவனுடைய எல்லா இராணுவவீரரும் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டதால், சிதேக்கியா பிடிபட்டான். 9 அவன் ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான்.
12 பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்த மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான். 13 அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான். 14 பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த எல்லா மதில்களையும் உடைத்தது வீழ்த்தியது. 15 மெய்க்காவல் தளபதி நேபுசராதான் ஏழை மக்களுள் சிலரையும், பட்டணத்தில் மீதியாயிருந்தவர்களையும், மீதியாயிருந்த கைவினைஞர்களுடனும், பாபிலோன் அரசனிடம் சரணடைய வந்தவர்களுடனும் நாடுகடத்திச் சென்றான். 16 ஆனால் அந்த நாட்டில் மீதியாயிருந்த ஏழை மக்களையோ, திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக மெய்க்காவல் தளபதி நேபுசராதான் அங்கே விட்டுச்சென்றான்.
17 பாபிலோனியர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலம் முழுவதையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 18 அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தூபகிண்ணங்களையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 19 மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தூபகலசங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும், பானைகளையும், குத்துவிளக்குகளையும், தட்டங்களையும், பானபலிக்குப் பயன்படுத்தப்பட்ட கிண்ணங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
20 யெகோவாவின் ஆலயத்துக்காக அரசனாகிய சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், அதன் உருளக்கூடிய ஆதாரங்களுக்கு கீழிருந்த பன்னிரண்டு வெண்கல எருதுகள், ஆகியவற்றிலுள்ள வெண்கலத்தின் எடை நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன. 21 ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமும், பதினெட்டு அடி சுற்றளவுமாயிருந்தன. ஒவ்வொன்றும் நான்கு விரலளவு கனமாகவும், உள்ளே குழாயாகவும் இருந்தது. 22 தூணின் உச்சியில் ஏழரை அடி உயரமான வெண்கலக் குமிழ் இருந்தது. அது சுற்றிலும் வெண்கலத்தினாலான வலைப் பின்னல்களாலும், வெண்கல மாதுளம் பழங்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தன. மற்றத் தூணும், அப்படியே அதன் மாதுளம் பழங்களோடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. 23 அதன் பக்கங்களில் தொண்ணூற்றாறு மாதுளம் பழங்கள் இருந்தன. சுற்றிலும் வலைப்பின்னலுக்கு மேலாக இருந்த மாதுளம் பழங்களின் மொத்த எண்ணிக்கை நூறு ஆகும்.
24 மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது நிலை ஆசாரியனான செப்பனியாவையும், மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான். 25 மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில் இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஏழு அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான். 26 காவல் தளபதி நேபுசராதான் அவர்கள் யாவரையும் ரிப்லாவிலிருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டுபோனான். 27 அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான்.
- a எரேமியாவின் இவர் இந்த புத்தகத்தை எழுதிய இறைவாக்கினரான எரேமியா அல்ல