Link to home pageLanguagesLink to all Bible versions on this site
12
1 நீ உன் வாலிப காலத்தில்
உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்;
துன்ப நாட்கள் வராததற்குமுன்னும்,
“வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை”
என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள்.
2 அதாவது சூரியனும், வெளிச்சமும்,
சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும்,
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள்.
3 வீட்டுக் காவலாளிகள்[a] தங்கள் முதுமையில் தள்ளாட,
பெலமுள்ளவர் கூனிப்போய்[b],
அரைக்கும் பெண்கள்[c] வெகுசிலராகி,
ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள்[d] ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள்.
4 வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு
அரைக்கும் சத்தம் குறைந்துபோக,
பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க,
இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை.
5 மேடான இடங்களுக்கும்,
வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும்,
வாதுமை மரம் பூக்கும்[e] முன்னும்,
வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும்,
ஆசையும் அற்றுப்போகுமுன்னும்,
மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே
துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும்
படைத்தவரை நினைவில்கொள்.
 
6 வெள்ளிக் கயிறு அறுந்து,
தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும்,
ஊற்றின் அருகே குடம் நொறுங்க,
கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும்,
7 மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி,
ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன்
உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள்.
 
8 “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை!
எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான்.
பொருளின் முடிவு
9 பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான். 10 பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை.

11 ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன. 12 என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக.

புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும்.
13 எல்லாவற்றையும் கேட்டு,
நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்:
இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்;
மனிதனின் பிரதான கடமை இதுவே.
14 ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும்,
அந்தரங்கமான செயல்களுக்கும்,
நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார்.

<- பிரசங்கி 11